ஒரே ஒரு ஒரு எலுமிச்சம் பழம்தான்.. ரூ.30 ஆயிரம் கொடுத்து வாங்கி சென்றார் பக்தர் ஒருவர். ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது.
மகாசிவராத்திரி பூஜைகள் என்றால் இங்கு பக்தர்கள் குவிந்து விடுவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி பூஜைகள் துவங்கியது. நேற்றுமாலை மறுபூஜைகள் நடத்தப்பட்டது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளிலில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். இறுதியாக பூஜையில் சாமியின் பாதத்தில் ஒரே ஒரு எலுமிச்சைப் பழம் ஏலம் விடப்பட்டது. ரூ.2 ஆயிரம் என்று ஆரம்பித்தது ஏலம்.
பிறகு ஒவ்வொருவராக போட்டி போட்டு விலையை உயர்த்தி கொண்டே போனார்கள். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஏலத்தை கண்டு களித்துகொண்டிருந்தனர். 2 ஆயிரத்தில் ஆரம்பித்த ஏலம் கடைசியாக 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. சக்திவேல் என்ற ஈரோட்டை சேர்ந்த பக்தர்தான் இந்த பழத்தை ஏலத்தில் வாங்கி சென்றார். இந்த எலுமிச்சையை வீட்டில் வைத்து பூஜை செய்தால் பல நன்மைகள் வந்து சேரும் என்பது பொதுவான நம்பிக்கை.
இப்படித்தான் போன வருடம் சிவராத்திரி விழாவில் ஒரு எலுமிச்சை 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதாம். இப்போது 30 ஆயிரம் ரூபாயாம்!