Type Here to Get Search Results !

அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கல்வி தொலைக்காட்சி: பள்ளிக்கல்வி துறை விரைவில் ஒளிபரப்பு











தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ‘கல்விக்காக மட்டும் தனியாக ஒரு தொலைக்காட்சி’ தொடக்கப்பட உள்ளது.


 அதில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை எப்படி திட்டமிட்டு நடத்துவது என்ற தலைப்பின் கீழ் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது.

32 மாவட்டங்களில் இருந்தும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஒளிபரப்புக்கு தேவையான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாக 24 மணி நேர புதிய சேனல் விரைவில் செயல்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


 இந்த புதிய கல்வி தொலைக்காட்சி சேனலுக்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் 4வது மாடியில் காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கும் பணி தற்ேபாது நடக்கிறது. இதில் வெளியிடப்பட உள்ள நிகழ்ச்சி நிரல்கள் வடிவமைக்கும் பணியும் நடக்கிறது.


இந்த கல்வி தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் அரசு செட்டாப் பாக்சில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாக உள்ளது. தினமும் காலை 5 மணிக்கு குறளின் குரல் என்ற தலைப்பில் ஒரு திருக்குறள் மற்றும் விளக்க உரை, அனிமேஷன் விளக்கம், இடம்பெறும்.


அதற்கு பிறகு நாள் குறிப்பு என்ற தலைப்பில் அன்றைய நிகழ்வுகள் குறித்த தகவல்கள், இந்த நாள் இனிய நாள் என்ற தலைப்பில் உலக நிகழ்வுகள் வெளியாக உள்ளன.


காலை 5.30 மணி முதல் 6 மணிக்கு நலமே வளம் என்ற தலைப்பில் உடல் நலம், யோகா செயல் விளக்கம், ஆரோக்கியம் குறித்த விளக்கவுரை, உணவு முறை எளிய மருத்துவம் ஆகியவை இடம்பெறும். அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் மதியம் 1.30 மணி ஒளிபரப்பாக உள்ளன. இவை தினமும் 3 முறை என 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளன.


இதற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் மீடியா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.


 இவர்கள் ஒளிப்பதிவு குழுவினருடன் சென்று மாவட்டத்தில் உள்ள கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை காட்சிப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவை சென்னையில் உள்ள காட்சிப் பதிவு மையத்தில் தொகுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட உள்ளன.


 இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் இந்த நிகழ்ச்சிகளை மாணவர்கள் பார்க்கும் வகையில் டிவிக்கள் பொருத்தப்பட உள்ளன.


Top Post Ad

Below Post Ad