Type Here to Get Search Results !

தேர்தல் தேதியை மாற்ற ஆய்வு: மதுரை கலெக்டருக்கு உத்தரவு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்



மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை மாற்ற முடியுமா? என்பது தொடர்பாக 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கலெக்டருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 -ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான மனு தாக்கல் வருகிற 19 -ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தல் நடவடிக்கை நாட்களில்தான் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 6 -ந் தேதி தெலுங்கு புத்தாண்டு பிறக்கிறது. ஏப்ரல் 14- ந் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல் 17 -ந் தேதி மகாவீர் ஜெயந்தி வருகிறது.

தேர்தலுக்கு மறுநாளான ஏப்ரல் 19- ந் தேதி புனித வெள்ளி தினம் கொண்டாடப்பட உள்ளது. ஓட்டுப்பதிவு நடக்கும் தினத்தன்று மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு நடக்கும் 18- ந் தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நடக்க உள்ளது.

மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், தமிழ்நாட்டில் தேர்தல் தேதி மாற்றப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சத்யபிரத சாகு கூறியதாவது:–-

தேர்தல் குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு தேர்வுகள் எப்போது நடைபெறுகிறது. வேறு ஏதேனும் விழாக்கள் மாவட்ட அளவில் வருகிறதா? என்பது பற்றி ஏற்கனவே கருத்து கேட்கப்பட்டது. அதை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியும் (கலெக்டர்) தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அளித்தனர்.

அந்த வகையில் மதுரையில் சித்திரை திருவிழா 18, 19 -ந் தேதிகளில் நடைபெறுவது பற்றி அந்த மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ஏற்கனவே தெரிவித்துள்ளாரா? என்பது பற்றி எங்கள் கவனத்துக்கு இன்னும் வரவில்லை. அதுபற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இதற்கிடையே மதுரை மாவட்ட கலெக்டரிடம் சித்திரை திருவிழா குறித்து கேட்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்ரல் 18 -ந் தேதி சித்திரை திருவிழாவும் வருவதால் ஓட்டுப்பதிவுக்கு அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்டு இருக்கிறோம்.

2 நாட்களில் மதுரை கலெக்டர் இது தொடர்பாக எங்களுக்கு அறிக்கை தர உள்ளார். அதன் பிறகு இது தொடர்பான வி‌ஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்டுக் கொண்டன. மேலும் கோடை காலம் வருவதால் தமிழ்நாட்டில் சீக்கிரமாகவே பாராளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதன் அடிப்படையில் தான் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. எனவே குறிப்பிட்ட ஒரு தொகுதிக்காக தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலை இன்னொரு நாளுக்கு மாற்ற முடியுமா? என்பது தெரியவில்லை. கலெக்டர் தரும் அறிக்கையை பொறுத்தே இதுபற்றி இறுதி முடிவு தெரிய வரும்.

இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.


.         


Top Post Ad

Below Post Ad