Type Here to Get Search Results !

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால் துறை தேர்வு இன்று தேர்வு எழுத இருந்தவர்கள் அதிர்ச்சி


தபால் துறை தேர்வு இன்று நடைபெறும் நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இருக்கும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்து உள்ளது. இதனால் இன்று தேர்வு எழுத இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தபால் துறையில் பணியிடங்கள்


இந்தியாவில் தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை இந்திய தபால் துறை வெளியிட்டு இருந்தது. இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அடிப்படை கல்வியறிவாக கணினி தொடர்பான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.


கிளை போஸ்ட் மாஸ்டர், உதவிக்கிளை போஸ்ட் மாஸ்டர், தபால் டெலிவரி செய்பவர்கள் உட்பட பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த வாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இளைஞர்கள் அதிர்ச்சி


அதன்படி இந்த தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடை பெறும் நிலையில், தபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்பை அறிந்த தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், ஏற்கனவே இருந்து வந்த நடைமுறையில் மாநில மொழியில் வினாத்தாள்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


3 மொழிகளில் வினாத்தாள்


இதுகுறித்து தேர்வு எழுத இருக்கும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் கூறியதாவது:-


நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த தபால் துறையின் தேர்வுகளில், வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்த நடைமுறை தேர்வு நாளை (இன்று) நடக்கவிருக்கும் நிலையில் கடந்த 11-ந்தேதி புதிதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். குறிப்பாக தபால் துறை தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகள் மற்றும் இந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் கேள்வி கேட்கப்படுவது வழக்கம். இதேநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தபால் துறைகளுக்கான தேர்வு தமிழகத்தில் நடந்தது.


அவ்வாறு நடந்த பிறகும், வடமாநில மாணவர்கள் தமிழ் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 4 வருடங்களாக தபால் துறைகளுக்கான தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், காலிபணியிடங்களை நிரப்பக்கோரி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில், கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டது. தற்போது, ஏற்கனவே அமலில் உள்ள தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


அரசியல் கட்சிகள் கண்டனம்


பொதுவாக தபால்துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது இந்த முறையும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


தேர்வு எழுதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், எங்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாக மாறி உள்ளது.


இவ்வாறு இளைஞர்கள் கூறினார்கள்.

Top Post Ad

Below Post Ad