Type Here to Get Search Results !

1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, காளை!’ -ஆம்பூர் தொழிலாளி சாதனை



ஆம்பூரைச் சேர்ந்த நகைத் தொழிலாளி, 1 கிராம் 900 மில்லி தங்கத்தில் நுண்ணியமாக மிகச்சிறிய அளவில் பொங்கல் பானை, கரும்பு, காளை, அடுப்பை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் சி.எஸ்.தேவன் (53). பரம்பரை நகைத் தொழிலாளியான இவர், மிட்டூர் இந்தியன் வங்கி கிளையில் தங்க நகை மதிப்பீட்டாளராகவும் பணியாற்றி வருகிறார். கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறு மாதிரி பொருட்களை திறம்பட உருவாக்கி வருகிறார். ஏற்கனவே ‘மிகச்சிறிய அளவில் இந்திய வரைபடத்தை’ உருவாக்கியிருந்தார்.

தங்கத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை மாதிரி, திருக்குறள் சுவடி, மகாத்மா காந்தி, அப்துல்கலாம், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்கள், தமிழக அரசின் பசுமை வீடு மட்டுமின்றி கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, 3 கிராம் 700 மில்லி தங்கத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும் தத்ரூபமாக காட்டும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் உட்படப் பலவற்றை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, 1 கிராம் 900 மில்லி தங்கத்தில் மிக நுண்ணிய அளவில் மூன்று கரும்பு, பானை, அடுப்பு, விறகு, காளை மாடு, கரண்டி ஆகியவற்றைத் தத்ரூபமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார். ‘‘24 மணி நேர இடைவிடாத தொடர் முயற்சியால் இவற்றை உருவாக்கியதாக’’ நகைத் தொழிலாளி தேவன் பெருமிதம் கொண்டார். மிகச்சிறிய பொங்கல் பானை, கரும்பு, காளை மாட்டைப் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.


Top Post Ad

Below Post Ad