Type Here to Get Search Results !

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர்: சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு


பிறப்புச்சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவது சம்பந்தமாக சென்னை மாநகராட்சி புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து ஆணையர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 குழந்தைகள் பிறப்புச் சான்றிதழை அந்தந்த மண்டல அலுவலகங்களில் வாங்க வேண்டும், அதையும் விண்ணப்பித்து கடிதம் எழுதி பணம் கட்டி ஒருவாரம் கழித்து கிடைக்கும் என்பன போன்ற பழைய நடைமுறைகளை மாற்றி ஆன்லைனில் கிடைக்கும் நடைமுறையை சென்னை மாநகராட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்தது. 

இதன்மூலம் பிறப்புச்சான்றிதழ் எடுக்கும் நடைமுறைச் சிக்கல் தீர்க்கப்பட்டது. இந்நிலையில் இதில் குழந்தைகள் பெயரைப் பதிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்த சென்னை மாநகராட்சி அறிவிப்பு வருமாறு: “பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300 குழந்தைகள் பிறக்கின்றனர். 

மேற்படி பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் நேரடியாக சென்று விண்ணப்பித்து பெற்று வந்தனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளமான www.chennaicorporation.gov.in -ல் பிறந்த குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்வதற்காக ஒரு தனிப்பிரிவு (Child Name Inclusion) உருவாக்கப்பட்டுள்ளது. 

மேற்படி உருவாக்கப்பட்டுள்ள பிரிவில் பெற்றோர்கள் பிறந்த குழந்தையின் பெயரை ஒருமுறை பதிவேற்றம் செய்தபிறகு, மீண்டும் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே, சம்பந்தப்பட்ட உரிய ஆவணங்களுடன் தவறு இல்லாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொதுமக்கள் இப்பிறப்பு சான்றிதழ்கள் பெறும் வசதியினை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் உடனடியாக பெற்று பயனடையலாம் என ஆணையாளர் கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad