Type Here to Get Search Results !

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் முதன்முறை பிடிபடும்போது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அடுத்த முறை பிடிபடும்போது அபராதத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வசூலிக்கப்படும். மீண்டும் அதே நிறுவனம் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருள்களை தயாரித்தால் அந்த நிறுவனம் சீல் வைத்து மூடப்படும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து வைத்தாலோ, வழங்கினாலோ அல்லது எடுத்துச் சென்றாலோ முதல்முறை ரூ.1 லட்சமும், மீண்டும் பிடிபட்டால் ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அதே குற்றத்தைச் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை அல்லது விநியோகம் செய்தால், முதல்முறை பிடிபடும்போது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அத்தகைய செயல் தொடர்ந்தால், அபராதம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வணிக ரீதியில் பயன்படுத்துவோருக்கு முதல்முறை ரூ.25 ஆயிரமும், மீண்டும் பிடிபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ந்து அதே குற்றத்தைச் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
சிறிய கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருள்கள் விற்றால் முதல் தடவை ரூ.100, 2-ஆவது தடவை ரூ.200, 3-ஆவது தடவை ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகும் சிறிய கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வீடுகளில் பயன்படுத்தினாலும் அபராதம் வசூலிக்கப்படும். பிடிபடுவது முதல்முறையாக இருந்தால் ரூ.500 அபராதம், மறுபடியும் கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.
சென்னையைப் பொருத்த வரை, அபராதங்களை விதிப்பதற்கு மநகராட்சி வார்டுகள் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற மாநகராட்சி பகுதிகளிலும், மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடை உத்தரவு அமலுக்கு வந்த நாளான கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை 250 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் திங்கள்கிழமை முதல் அபராதம் வசூலிப்பு முறை அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad