Type Here to Get Search Results !

பொருளாதார மந்தநிலை எதிரொலி : பி.எஃப். வட்டி விகிதம் 8.65%லிருந்து 8.5% ஆக குறைத்தது மத்திய அரசு ; வருவாய் குறைவதால் 6 கோடி தொழிலாளர்கள் பாதிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.65%லிருந்து 8.50%ஆக மத்திய அரசு குறைத்தது. 2019-2020 நிதியாண்டுக்கான பி.எப்.வட்டி 8.50%ஆக இருக்கும் என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் கங்வார் அறிவித்துள்ளார். எனவே, பி.எஃப். கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள், நடப்பு ஆண்டில் தங்கள் வருங்கால வைப்பு நிதி வைப்புகளில் 0.15% குறைந்த வருவாயைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. பொருளாதார மந்தநிலை காரணமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு வருவாய் குறைந்ததால் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்

*ஊழியர்கள் சம்பளத்தில், ஒரு பகுதி, வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டியாக தற்போது 8.65 சதவிதம் வழங்கப்படுகிறது. வங்கிகளில் சேமிக்கப்படும் FIXED DEPOSIT போன்றவற்றை விட அதிக வட்டி வழங்கப்படுவதும், வருமான வரி சலுகையும் இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

*ஒவ்வொரு ஆண்டும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் தீர்மானிக்கப்படும். இதன் படி, 2015-16ம் ஆண்டு 8.8 சதவிதமாக இருந்த வருங்கால வைப்பு நிதி வட்டி, 2016-17ல் 8.65 சதவிதமாக குறைக்கப்பட்டது. 2017-18-ல் 8.55 சதவிதமாக குறைக்கப்பட்டு, மீண்டும், 2018-19ல் 8.65 சதவிதமாக அதிகரிக்கப்பட்டது.

பி.எப்.வட்டி விகிதம் குறைப்பு

இந்நிலையில் 2019 -20ம் ஆண்டிற்கான பி.எப்.வட்டி விகிதம் 8.5 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது. *இந்தாண்டுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்க இன்று அறங்காவலர் வாரிய குழு டெல்லியில் கூடியது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் இந்தாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.65% லிருந்து 8.50%ஆக குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் கஙவார் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்தாண்டுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும்படி, அறங்காவலர் வாரிய குழுவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும், நிதி அமைச்சகம் நெருக்கடி கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார மந்தநிலை


*வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும் தொகை பல்வேறு இடங்களில் முதலீடு செய்யப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் மேற்கொண்ட முதலீடுகள், அரசாங்க பத்திரங்கள் மீது எதிர்பார்த்த வருமானம் அரை சதவிதத்திற்கும் அதிகமாக குறைந்திருப்பதால், இந்த ஆண்டு வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை 0.15 சதவிதம் மத்திய அரசு குறைத்துள்ளது.

*வருங்கால வைப்பு நிதி தரப்பில் இருந்து, சுமார் 4,500 கோடி ரூபாய் அளவிற்கு கடன் சுமையில் சிக்கி தவிக்கும் DHFL, IL&FS போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை திரும்ப பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

*2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில், சுமார் 18,00,000 கோடி ரூபாயை வருங்கால வைப்பு நிதி ஆணையம் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளது. இதில் 85 சதவிதம் கடன் பத்திரங்களிலும், 15 சதவிதம் நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad