Type Here to Get Search Results !

சப் கலெக்டர் கேட்ட வினோத வரதட்சணை: மக்கள் பாராட்டு

100 சவரன் நகை வேண்டாம், கார் வேண்டாம் எனது கிராமத்திற்கு வரும் போது, எனது மக்களுக்காக இலவசமாக மருத்துவம் பார்க்கும் டாக்டர் பெண் வேண்டும் என நெல்லை சப்-கலெக்டர் வரதட்சனையாக கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து,கனகா தம்பதியின் மகன் சிவகுருபிரபாகரன்,30, ஐஐடியில் எம்.டெக் முடித்த சிவகுரு பிரபாகரனுக்கு, ஐஏஎஸ் ஆவது மட்டுமே இலக்காக இருந்தது. இதனால், பிற துறைகளில் கிடைத்த வேலை வாய்ப்புகளை தட்டி கழித்தார். 2018ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்., ஆனார். நெல்லை மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

அத்துடன் அப்துல்கலாம் பெயரில் டாக்டர் ஏ.பி.ஜே கிராம வளர்ச்சி குழு என ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளைச் செய்து வருகிறார். கிராம மக்களிடம் உடல் நலம் குறித்த விழிப்புணர்வுகள் இல்லாததால், அவர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, சிவகுருபிரபாகரன், 15 மருத்துவர்கள் கொண்ட பெரிய அளவிலான மருத்துவ முகாம் ஒன்றை நடத்தினார். பின்னர் ஒட்டங்காடு பெரிய ஏரியை ஊர்மக்கள் உதவியுடன் துார் வாரினார். இப்போது ஏரி நிரம்பி கடல் போலக் காட்சியளிக்கிறது. இதேபோல் நெல்லையிலும் ஏரி குளங்களை துார்வாரும் பணியை செய்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு பெற்றோர்கள் வரன் தேடி வந்தனர். சிவகுருபிரபாகரன் பெற்றோரிடம், 100 பவுன் நகை,கார் போன்றவை வரதட்சனையாக வேண்டாம். பெண் டாக்டராக இருக்க வேண்டும், நமது கிராமத்திற்கு வரும் நேரத்தில், கிராமமக்களுக்காக இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதை கருத்தில் கொண்ட பெற்றோர்கள் டாக்டர் பெண்ணாக பார்த்தனர்.
சிவகுரு பிரபாகரனின் மனதை நினைத்து நெகிழ்ந்து போன சென்னையைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ண பாரதி அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். கிருஷ்ண பாரதி விழுப்புரத்தில் மருத்துவம் பயின்றாலும் மற்றபடி வேலை செய்வதெல்லாம் சென்னைதான். ஆனால் கிருஷ்ண பாரதிக்கும் கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்ததால், சிவகுருவின் கோரிக்கைக்கு உடனடியாக ஒகே சொல்லிவிட்டார். அதன்படி தற்போது பெற்றோர், கிராம மக்கள் முன்னிலையில் சிவகுரு- பிரபாகரன், கிருஷ்ண பாரதி திருமணம் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தை கேள்விப்பட்ட கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சியடைந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Top Post Ad

Below Post Ad