Type Here to Get Search Results !

*கைரேகை எப்போதுமே மாறாதா..?


கட்டை விரல் அல்லது பெருவிரல் ரேகை பெருமளவில் மாறாது என்பதால் தான், முக்கியமான ஆவணங்களில் ஒருவருடைய கையெழுத்துக்குப் பதிலாக விரல் ரேகை பெறப்படுகிறது. தனித் தன்மை கொண்டது, வாழ்நாள் முழுக்க மாற்ற முடியாதது என்பதால், ஒருவருடைய மாறாத அடையாளமாக அது கருதப்படுகிறது.

ஒரு குழந்தை பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் சுருள்களும் முடிச்சுகளும் கொண்ட ரேகைகள் உருவாகின்றன. அப்படி உருவாகும் ஒருவருடைய கைரேகை பிறப்பு முதல் இறப்பு வரை மாறாமலேயே இருக்குமா?

*மாறாத தடயம்..*

நமது கை வழு வழுவென்று இருந்தால், எதையும் பிடிக்க முடியாது, வழுக்கி விடும். நாம் இறுக்கமாகப் பிடிக்க உதவுபவை ரேகைகள். கைகளுக்கு உராய்வைத் தரும் வரிமடிப்புகள் தான் இந்த ரேகைகள். கண்ணாடி, உலோகம், பளபளப்பு ஏற்றப்பட்ட எல்லாப் பொருட்களிலும் ரேகைகள் பதியும். மேல் தோல் மடிப்பில் உள்ள சுரப்பிகளிலிருந்து வியர்வை சுரக்கும். சுரப்பியிலிருந்து வியர்வை வெளியாகிக் கொண்டே இருப்பதனாலேயே, ரேகைகள் இப்படிப் பதிந்து விடுகின்றன. குற்றம் நடந்த இடத்தில் இப்படிக் கிடைக்கும் ரேகைகளே தடயம் அறியவும் புலனாய்வுக்கும் பயன்படுகின்றன.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க, கைரேகை பயன் படுத்தப்படும் முறை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வருகிறது. எதிர்பாராத விதமாக ஒருவர் இறந்துவிடும் போது, அடையாளம் காணவும் கைரேகை பயன் படுத்தப்படுகிறது.

*முதுமை மாற்றங்கள்*

எல்லாம் சரி, வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் உடல் வளர்ச்சியும், தளர்வும் அடைந்து கொண்டிருக்கும் நிலையில் கைரேகை மட்டும் வாழ்நாள் முழுக்க மாறாமல் இருக்குமா? கையில் ஏதேனும் வெட்டினாலோ, சிராய்ப்போ, அமிலமோ அல்லது தோல் பிரச்சினையாலோ கைரேகைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்படலாம். இருந்தபோதும் ஒரு மாத இடைவெளியில் ரேகைகள் திரும்ப உருவாகிவிடும்.

வயதாக ஆக, விரல் நுனிகளில் உள்ள தோலின் நெகிழ்வுத் தன்மை குறைந்து விடும், அதனால் வரிமடிப்புகள் தடித்து விடுகின்றன. ஆனால், அதற்காக விரலின் ரேகை மாறிவிடாது. ஆனால் வயதான காலத்தில் அதை ஸ்கேன் செய்வதோ, அச்சிடுவதோ பிரச்சினையாகி விடுகிறது.

*கை நாட்டு..*

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் - கை நாட்டு - என்று குறிப்பிடப் படுகிறார்கள். விரல் ரேகை - வைப்பதைத் தான் கைநாட்டு என்று கூறுகிறார்கள்.

ஒரு நபரின் விரல்ரேகை அமைப்பைக் கொண்டு அவரை அடையாளம் காணும் முறையை 1892-ல் Sir.Francis Galton என்னும் ஆங்கில அறிஞர் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். எனவே விரல் ரேகை பற்றிய பாடம் [DACTYLOGRAPHY] - கால்டன் முறை - [Galton System] என்று அழைக்கப்படுகிறது. தாயின் கருப்பையில் நான்கு மாதக் கருவாக இருக்கும் போதே விரல் ரேகை உருவாகி விடுகிறது. பின்னர் எப்போதுமே மாறாது. இந்த ரேகை அமைப்பு - தோலின் புறத் தோல் [Epidermis] , அடித் தோல் [Dermis] ஆகிய தோலின் இரு அடுக்குகளிலும் பதிந்துள்ளது..

ஒருவருடைய விரல் ரேகை அமைப்பு மற்றொருவருடைய விரல் ரேகை அமைப்புடன் ஒத்திருக்காது.. சுமார் 6400 கோடி மக்களில் மட்டுமே இருவருக்கு ஒரே மாதிரி விரல் ரேகை அமைய வாய்ப்புண்டு. ஒரே கருவில் உருவான இரட்டைக் குழந்தைகளுக்குக் கூட ஒத்து இருக்காது என்பது மிகவும் விந்தையானது..!!


Top Post Ad

Below Post Ad