Type Here to Get Search Results !

அருமையான சிறுகதை.யார் மீது தவறு? -தினம் ஒரு குட்டிக்கதை பால.ரமேஷ்.


மற்றவர்களை பிரமிக்க வைப்பதா வாழ்க்கை?

அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான்.

விமான நிலையத்திலிருந்து அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை.

'சரி இன்னும் ஒரு மணி நேரத்தில், வீட்டுக்கு தானே போகப் போகிறோம்' என எண்ணியவன், கால் டாக்சியில் கிளம்பினான்.15 நிமிடங்களில் கிழக்கு தாம்பரத்தில் இருந்த நவீன அபார்ட்மென்ட்டை அடைந்தது, கால் டாக்சி.

அபார்ட்மென்ட்டை அடைந்து, இரண்டு மூன்று முறை காலிங்பெல்லை அடித்தும், கதவு திறக்கவில்லை. ஒருவேளை வீடு பூட்டியிருக்கிறதோ என நினைத்து, மறுபடியும், தன் அப்பாவை மொபைல் போனில் கூப்பிட்டான்.

'ரிங்' போனதே தவிர, போனை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், எதிர்வீட்டு காலிங்பெல்லை அடிக்க, இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்தார், அவ்வீட்டுக்காரர்.

''மாமா... அப்பா, அம்மா வெளியே போயிருக்காங்களா... போன் பண்ணா, எடுக்க மாட்டேங்கிறாங்க" என்றான்.

''உனக்கு விஷயமே தெரியாதா. உங்க அப்பா, உன்கிட்ட சொல்லலயா...''

''இல்லயே மாமா என்ன விஷயம்?''

''உனக்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்கு. உங்க அப்பாவும், அம்மாவும், முதியோர் இல்லத்துல இருக்காங்க; யாராவது வந்தா கொடுக்கச் சொல்லி அட்ரஸ் கொடுத்திருக்காரு உங்கப்பா; இரு எடுத்துட்டு வர்றேன்,'' என்று சொல்லியபடியே உள்ளே சென்று எடுத்து வந்து கொடுத்தார்.

'இவங்களுக்கு என்னாச்சு... எல்லா வசதிகளும் நிறைஞ்ச அபார்ட்மென்ட் இருக்கயில ஏன் முதியோர் இல்லத்தில போய் தங்கணும்' என்று குழம்பிப் போனான்.

''தேங்க்ஸ் மாமா... நான் வரேன்,'' என்று சொல்லி கிளம்பினான்.

அதுவரை மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த அவன் மனைவி ப்ரீதி, ''என்னாச்சு தீபக்?'' என்று கேட்டாள்.

''என்னத்த சொல்ல முதியோர் இல்லத்துல தங்கி இருக்காங்களாம்'' என்றான் கோபத்துடன்!

''முதியோர் இல்லமா?ஏன் வீட்டை விட்டுட்டு'' என்றாள், ஆச்சரியத்துடன்!

அப்பார்ட்மென்ட் வளாகத்தை விட்டு வெளியே வந்து, கால்டாக்சியில் ஏறியதும், ''முடிச்சூர் போப்பா,''என்று சொன்ன தீபக், மீண்டும், தன் அப்பாவை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றான். அவர் எடுக்கவில்லை என்றதும், கோபத்தில் அவன் முகம் சூடானது.

''எங்கே போறோம்?'' என்று கேட்டாள் ப்ரீதி.

''அமைதி இல்லம்" சொன்னவனின் குரல் அதிர்ந்தது. காரில் இருந்து இறங்கியவர்களின் கண்களில் பட்டது, 'அமைதி ஹோம்' போர்டு !
மகனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு, இல்லத்தின் உள்ளே சென்றான் தீபக்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர், ''யார் நீங்க, என்ன வேணும்.'' என்று கேட்டார்.

''ராமச்சந்திரன், மாலதி அம்மாளை பாக்கணும்,'' வியர்வையை துடைத்தபடியே சொன்னான்.

ப்ரீதியும், மகனும் மொபைலை நோண்டியபடி இருந்தனர்.

''நீங்க?''

''அவங்களோட பையன்,'' என்றான் தயக்கத்துடன்!

அவனை உட்கார சொன்னவர், ''சின்ன நிகழ்ச்சி நடக்குது சார். பெரியவங்களோட நேரம் செலவழிக்கிறதுக்காக, ஒரு கம்பெனியிலிருந்து வந்திருக்காங்க, கொஞ்சம் வெய்ட் செய்யுங்க,'' என்று சொல்லி, உள்ளே சென்றார்.

சிறிது நேரத்தில், மகிழ்ச்சியுடன் அங்கு வந்தனர், தீபக்கின் பெற்றோர்.

வெறுப்பு, கோபம் இரண்டும் சேர்ந்து, அவர்களை வெறித்தவன், ''என்னப்பா இதெல்லாம்? என்ன நினைச்சுட்டு இங்க வந்தீங்க...'' என்றான்.'

'தீபக் சாப்பிட்ட உடனே மூச்சு வாங்குதுப்பா. இப்ப எல்லாம் ஒண்ணும் முடியல" என்றபடி, அவனருகில் அவன் அம்மா அமர, ''அம்மா முதல்ல இங்கயிருந்து கிளம்புங்க; என்ன மடத்தனம் இது...'' என்று கர்ஜித்தான்.

அங்கு வந்த தீபக்கின் அப்பாவிடம், ''ஏன் மாமா உங்களுக்காகத் தானே எல்லா வசதியும் இருக்கிற மாதிரி அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்திருக்கோம். சொல்லாம கொள்ளாம நீங்க பாட்டுக்கு முதியோர் இல்லத்துல வந்து தங்கிட்டீங்களே உங்க மகன் எவ்வளவு, 'ஷாக்' ஆயிட்டார் தெரியுமா''என்றாள் ப்ரீதி.

''என் மானத்த வாங்கணும்ன்னே, இங்க வந்து தங்கி இருக்கீங்க. ரிசப்ஷன்ல இருந்தவர்கிட்ட, நான் அவங்க பையன்னு சொல்றப்ப, எப்படி கூனி, குறுகிப் போயிட்டேன் தெரியுமா.
''உங்களுக்கு அபார்ட்மென்ட்ல வசதி குறைவுன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லன்னு வேற வசதியான ப்ளாட் வாங்கி, அதுல உங்கள ராஜா மாதிரி தங்க வைச்சிருக்க மாட்டேனா...'' என்றவன்,
அம்மாவைப் பார்த்து, ''அப்பா தான் மடத்தனமா ஏதோ சொன்னார்ன்னா உனக்கு மூளை வேணாமா? சே, எதிர் ப்ளாட்டில் குடியிருக்கிற மாமா, 'உனக்கு விஷயமே தெரியாதா'ன்னு கேட்ட போது, அந்த இடத்துல என்னால நிக்கவே முடியல.

''உன் கோபம் புரியுதுப்பா. ஆனா''

''என்னப்பா ஆனா''

கோபமாக ஆரம்பி த்த வனை, அமைதியாக இருக்கும்படி சைகையினால் கட்டளையிட்டவர்,

''உன்கிட்ட சொல்லாம நாங்க இந்த முடிவ எடுத்திருக்க கூடாது தான்; ஆனா, முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்க. நாங்க இங்க வந்தது, மாற்ற முடியாத முடிவுன்னே சொல்லலாம்,'' என்றதும், அதிர்ச்சியுடன் அப்பாவை பார்த்தான்.

''ஆமாம் தீபக். உன்கிட்ட முதல்ல ஏன் சொல்லலன்னு கேட்ட இல்லயா. சொன்னா உனக்கு புரியாது; ஒத்துக்க மாட்டே; தர்க்கம் செய்வாய். நீ சொன்னியே, அந்த அபார்ட்மென்ட்டுல எங்களுக்கு என்ன குறைன்னு. வசதியில் எந்தவொரு குறையும் இல்ல; ஆனா, எங்களால எதிர் வீட்டுக்காரரைக் கூட சந்தித்துப் பேச முடியிறதில்லங்கிறது தான் பெரிய குறை. ''மாசத்துக்கு ரெண்டு, மூணு முறை, 'ஹலோ சார்... சவுக்கியமா...' அவ்வளவுதான் பேச்சு; எதிர் பிளாட்காரர் தான் இப்படின்னா, மத்த ப்ளாட்ல எல்லாம், யார் இருக்காங்கன்னே தெரியாது. நாங்க கூட, சில பேர் கூட பழக முயற்சி செய்தோம்; யாரும் ஈடுபாடு காட்டினா தானே.நாள் முழுக்க, நாங்க ரெண்டு பேரும், எங்களுக்குள்ளேயே என்னத்தப்பா பேசிக்கிறது. இங்க ஏன் வந்தோம்ன்னு கேட்டியே. இங்க எல்லாரும் எங்க வயசுக்காரங்க; மனம் விட்டு பேசுறோம். சண்டை சச்சரவுகளும் வரத் தான் செய்யும்; அதுவும் வாழ்க்கைக்கு தேவை தானே. பேசிப் பழக, மனுஷங்க இல்லாதது என்ன வாழ்க்கை. நீ, வேலை கிடைச்சதுன்னு அமெரிக்கா போயிட்ட. உன்னை போகாதேன்னு சொல்ல, எங்களுக்கு உரிமை இருக்கான்னு தெரியல. ஏன்னா, அது உன் விருப்பம்; உன் வாழ்க்கை. எங்க கதி?வெறும் கட்டடம் மட்டும் வாழ்கையாகிடுமா?  ''இங்க எங்களோட பேசிப் பழக நிறைய பேர் இருக்காங்க. எங்க மனசுக்கு நிறைவு இருக்கு. நீ மறுபடியும் ஊரில் வந்து செட்டில் ஆகறேன்னு சொல்லு. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கறதா இருந்தா, மறுபடியும் வீட்டுக்கு வர்றோம். அதுக்கு சாத்திய மில்லன்னா நாங்க இங்கேயே இருந்துடுறோம்.  வெறும் சுவர்கள் மத்தியில் இருக்கறது கொடுமை; அது, எங்களால முடியாதுப்பா,'' என்றவரின் கண்கள், கலங்கி இருந்தது.

''தீபக் இந்த முடிவை எடுத்ததுல, எனக்கு தான் பெரிய பங்கு இருக்கு,'' என்ற அம்மா, ''இங்கே, எல்லாரும் கிட்டத்தட்ட எங்க வயசுக்காரங்கிறதால சிரிச்சு, பேசி, கலகலன்னு பொழுது போகுது.  செங்கல், சிமென்ட், கதவு, ஜன்னல், மாடுலர் கிச்சன், 'ஏசி' இதெல்லாம் மட்டும் வீடு இல்லப்பா, வீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்; இனிமே இது தான் எங்க வீடு"

கண்ணீரோடு நிமிர்ந்த மகன் தீபக் பேச ஆரம்பித்தான். ஏப்பா நீங்கள் திருமணத்திற்கு முன்பே நல்ல உத்தியோகத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிய அரசு வேலையில் தானே இருந்தீங்க.தாத்தா சொத்தான விவசாய நிலங்கள் வேறு நிறைய இருந்திருக்கு  இவ்வளவு பணத்தையும்  வைத்து கொண்டு பின் ஏன்ப்பா ஒரே பிள்ளை போதும்னு நிறுத்துனீங்க?என்னோடு இன்னும் ஒரிரு குழந்தைகளை பெற்று வளர்த்து படிக்க வைக்க வசதியிருந்தும் தாங்கள்  ஏன் செய்யவில்லை? உங்கள் வசதியை வைத்துக்கொண்டு என்னால் இனி  அண்ணன்,தம்பி,அக்காள் தங்கைகளை பெறமுடியுமா? யாரும் இல்லாதவனா என்னை நீங்கள்  ஆக்கிவிட்டீர்களே அப்பா?தாத்தா வசதி குறைவாயிருந்தும் ஐந்தாறு குழந்தைகளை பெற்று உங்களை எல்லாம் நல்லா வளர்க்கவில்லையா?படிக்க வைக்கவில்லையா?நீங்கள் எல்லாம் அண்ணன்,தம்பி, அக்கா,தங்கை என எப்படி சந்தோஸமா இத்தனை வருஷமும் இருந்தீர்கள். உங்கள் அண்ணன் தம்பி எல்லாம் நிறைய குழந்தை குட்டிகளோடு சந்தோஸமா தானேப்பா ஊரில் இருக்காங்க?மற்றவுங்க பெரிசா நினைக்கனும்னு என்னையும் ஹாஸ்டல தங்க வைத்து படிக்க வைத்து படிப்பு படிப்பு என்று என் இளமையில் எனக்கு கிடைக்க வேண்டிய அத்தனை சந்தோஸமும் இல்லாமல் செய்தீங்களேப்பா. உங்களுக்கு பிறகு எனக்கு யாருப்பா இருக்கா? எனக்கு நல்ல வேலைக்கிடைத்தும் அங்கே போனால் உங்களுக்கு துரோகம் செய்கின்றோமோ என்று என்னை என் மனசாட்சி தினம் தினம் கொல்றது உங்களுக்கு தெரியாதுப்பா. அங்கேயும் வந்து தங்க மாட்டேன் என்கின்றீங்க.
என் மனைவி, அவள் வீட்டில் அவளும் ஒரே பெண். அவள் அப்பா அம்மாவுக்கும் உங்களை போன்ற நிலைதான். என்னைப் போன்றே அவளும் அவுங்க அப்பா அம்மாவை வயதான காலத்தில் பக்கத்தில் வைத்து பாதுகாக்க முடியவில்லையே என்ற கவலை. இது எல்லாம் எங்கள் தவறாப்பா?
ஒரே பிள்ளையான என்னையும் நல்லா படிச்சாதான் பெரிய வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்கலாம் என, என்னை ஹாஸ்டல்ல தங்க வைக்கும் போது நீங்கள் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்காப்பா. நீங்க, அம்மா, எவ்வளவு பெரிய வீடு, சித்தப்பா பையன், பெரியப்பா புள்ளைங்கயென அவ்வளவு பேர் இருந்தும்,என்னை சின்ன வயதில் இருந்தே ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தப்ப நான் எவ்வளவு கஷ்டபட்டேன் என்பது உங்களுக்கு தெரியாதுப்பா? அப்பயும் இதே போல பெரிய வீட்டில் நீங்களும் அம்மாவும் மட்டும்தானேப்பா இருந்தீங்க?அப்ப தோனலையாப்பா நம் பிள்ளை நம்மோடு தங்கியிருந்து படிக்க வைக்க வேண்டும் என்று? நம்ம சொந்த ஊரான தஞ்சாவூரிலேயே நம் நிலங்களில் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு, படிப்புக்கு ஏத்த ஒரு வேலையையும் அங்கேயே தேடிக்கிட்டு சித்தப்பா பிள்ளை, பெரியப்பா பிள்ளை என நம்ம சொந்த பந்தத்தோட நானும் நிம்மதியா இருந்திருப்பேன். நீங்களும்  கடைசி காலத்தில் நிம்மதியா இருந்திருக்கலாமேப்பா? நம்ம சித்தப்பா பெரியப்பா பிள்ளையெல்லாம் வசதி குறைவா இருந்தாலும் கூட்டுக் குடும்பமா நிம்மதியா ஊர்ல இருக்காங்க.
என் புள்ளைய நல்லா படிக்க வைத்து அமேரிக்காவில் வேலைக்கு அனுப்ப போறேன்னு நம் சொந்த பந்தத்திலும், ஊர் முழுவதும் நீங்கள் சொல்லிகிட்டு இருந்ததை நான் என் சின்ன வயசுல பல முறை கேட்டதால்தான் நான் உங்கள் எண்ணத்தை நிறைவேத்த வேண்டும் என்ற வைராக்கியத்தோடு படித்து அமெரிக்காவும் போனேன். சென்னையிலும் வீடு வாங்கினேன். இப்ப என்னை குறை சொல்றீங்களே? இது சரியாப்பா? ஊர்ல நாலு பேர் பெருசா நினைக்கனும்னு வாழ ஆரம்பித்ததால் இப்ப நம் சந்தோஷத்தை எல்லாம் இழந்தும் வெளில காட்டிக்க முடியாம இருக்கோமேப்பா. மற்றவங்களை பிரமிக்க வைப்பதாப்பா வாழ்க்கை?


Top Post Ad

Below Post Ad