Type Here to Get Search Results !

புறநகர் ரயில் சேவை  6 மாதத்துக்குப் பின் தொடங்கியது: அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி


அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்காக சென்னை புறநகர் ரயில் சேவை இன்று காலை தொடங்கியது. ஏற்கனவே 30 ரயில் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், இன்று கூடுதலாக 12 ரயில்கள் இயக்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 6 மாத காலமாக புறநகர் ரயில் சேவை இயங்கவில்லை. இந்த புறநகர் ரயில் சேவை என்பது சென்னை மற்றும் புறநகர் மக்களின் ஜீவநாடியாக  உள்ளது. அந்த ரயில் பயணம் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு கலந்து போய்விட்ட ஒன்று. மேலும் இந்த ரயில்களை நம்பி மாற்றுத்திறனாளிகள் பலரும் வாழ்க்கை நடத்தி வந்தனர். 
 ரயில் இயக்கப்படாததால் இவர்கள் அனைவருக்குமே பெரும் இழப்பு ஏற்பட்டது. எப்போது மறுபடியும் புறநகர் ரயில்சேவை துவங்கும் என்ற ஏக்கம் சென்னைவாசிகளிடம் இருந்து. இந்நிலையில் மருத்துவ பணியாளர்களின் போக்குவரத்துக்காக  ஒரு சில இடங்களில் சிறப்பு ரயில்கள் சென்னை நகர் பகுதிக்குள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த ரயில்சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பணியாளர்களுக்காக அரக்கோணம் முதல் சென்ட்ரல் வரையும் சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை 30 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இன்று முதல் அத்தியாவசிய  மற்றும் அரசு பணியாளர்களுக்கு புறநகர் ரயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. 
 அதன்படி, இன்று கூடுதலாக 12 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் செங்கல்பட்டை சென்றடைந்தது. மறுமார்க்கமாக அங்கிருந்து புறப்பட்டு சென்னை  கடற்கரையை வந்தடைந்தது. இந்த ரயில்களில் மருத்துவம், மின்சாரம், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணியில் இருப்போர் என்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே  அனுமதிக்கப்பட்டனர்.  அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்டி பயணித்தனர். இந்த மின்சார ரயிலில் பயணிக்க கூடியவர்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணம் கிடையாது. ரயில் நிலையத்திற்குள் வரும்போது உடல் வெப்பநிலை அறியும் சோதனை  நடத்தப்பட்ட பின்பே அனுமதிக்கப்பட்டனர். மேலும் முகக் கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே ரயில் நிலையங்களுக்கும் அனுமதிக்கப்பட்டனர். 
 பொதுமக்கள் இந்த ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்களும் பயணிக்க எந்த பிரச்னையும் இல்லை என்று தெரியவந்தால் அரசு அனுமதி கிடைத்த உடன் விரைவில் பொதுமக்களும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 


கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்துச் சேவைகளும் முடங்கின. இதில் பொதுப் போக்குவரத்தும் ஒன்று. செப்டம்பரில் பொதுப் போக்குவரத்து, பேருந்து, மெட்ரோ ரயில் சேவை அனுமதிக்கப்பட்டாலும் புறநகர் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.
 6 மாதத்துக்குப் பின் புறநகர் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரையும், அதுபோல சென்ட்ரலில் இருந்து சூளூர்பேட்டை வரையும் புறநகர் ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை மற்றும் கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வரை புறநகர் ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 
 பயணிகள் பயணிக்கும் நடைமுறை 
 * புறநகர் ரயிலில் பயணம் செய்ய தமிழக அரசில் பணிபுரியும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு அவர்களுக்கான சிறப்பு ரயிலாக இது இயங்கும். பயணம் செய்ய வரும் அத்தியாவசியப் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் தொடர்பு அலுவலர்கள் அளிக்கும் அவர்களின் முழு விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்.

 * அரசு அளித்த அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும். அவர்கள் யார், எந்தத் துறை, பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அனுமதி அட்டையாக அது இருக்கவேண்டும். ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளுக்கு இரண்டு இடங்களில் பரிசோதனைகள் செய்யப்படும். முதல் வகை பரிசோதனை ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் ரயில் நிலைய வாயிலில் அடையாள அட்டையைச் சோதித்து அனுமதிப்பார்கள்.

 * இரண்டாவது பரிசோதனை ரயில்வே பிளாட்பாரத்தில் டிக்கெட் பரிசோதகரால் நடத்தப்படும். உள்ளே வரும் பயணிகளுக்கு சானிடைசர் உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளன.

 * ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 * பயணிகளின் உடல் பரிசோதனை உடல் வெப்ப பரிசோதனையும் நுழையும்பொழுதே பரிசோதிக்கப்படும். ஒரு வழிப்பாதைக்கான டிக்கெட்டுகள் மட்டுமே டிக்கெட் கவுண்ட்டரில் வழங்கப்படும்.

 * அத்தியாவசியப் பணிகளுக்கு அந்தப் பணியாளர்கள் அவர்களுடைய அலுவலகம் சம்பந்தப்பட்ட தொடர்பு அதிகாரியிடம் அடையாள அட்டையைப் பெற்று அதைக் காண்பித்து பயணம் செய்யலாம்.

 * சீசன் டிக்கெட், பயண டிக்கெட்டை ஸ்டேஷனில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் பெற்றுக்கொள்ளலாம். தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.

 * ஏற்கெனவே சீசன் டிக்கெட் வைத்து இருந்தவர்கள் அந்த சீசன் டிக்கெட்டில் உள்ள எஞ்சிய நாட்களுக்கான பயணத்தைத் தொடரலாம். ஒரு நிலையத்தில் ஒரு கவுண்ட்டர் மட்டுமே இயங்கும். இது பீக் அவரில் டிக்கெட் மட்டும் அளிக்கவும் மற்ற நேரங்களில் சீசன் டிக்கெட் வழங்கவும் பயன்படும்.

 முக்கியக் குறிப்பு:
 * அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டுமே டிக்கெட் விநியோகிக்கப்படும்.
 * பொதுமக்களுக்கு டிக்கெட் கிடையாது, அனுமதி கிடையாது.
 * ரயில் நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
 * ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸ், தமிழக அரசின் காவல்துறை ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். அவர்கள் பயணிகளின் அடையாள அட்டையைச் சோதித்து உள்ளே அனுப்புவார்கள்.
 * ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அரசின் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
 * அனைத்துப் பயணிகளும் முகக்கவசம், சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்”.
 இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் சீரடைய வேண்டுமானால் வேலைக்கு செல்வோருக்கும், தொழில் நிமித்தமாகச் செல்வோருக்கும் புறநகர் ரயில் சேவை அத்தியவசியம் என்பது விரைவில் பொதுமக்களும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது
       

Top Post Ad

Below Post Ad