Type Here to Get Search Results !

அவர் இறந்து விட்டார் - படித்ததில் பிடித்து பகிர்ந்தது


அடக்கம் செய்யணும்
சொல்லிக் கொண்டே சென்றார்கள்!!
.
மெல்ல எட்டிப் பார்த்தேன்
மூச்சு இல்லை – ஆனால்
இப்போதுதான் இறந்திருந்தார்
என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!
.
இருபது வருடங்கள்
முன்னாடி – அவர் மனைவி
இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!!
என்று யாரும் கேட்காத
நேரத்தில் – அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!
.
பொண்டாட்டி போனதுமே
போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று
காதுபட மருமகள் பேசியபோது
அவர் இறந்திருந்தார் அப்போதும்
யாருமே கவனிக்க வில்லை...!!
.
தாய்க்குப் பின் தாரம்
தாரத்துக்குப் பின் ..
வீட்டின் ஓரம் ...!!!
என்று வாழ்ந்த போது – அவர்
இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை ..!!!
.
காசு இங்கே
மரத்திலேயா காய்க்குது - என்று
மகன் அமிலவார்த்தையை
வீசிய போது..!!!
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!
.
என்னங்க...!!!
ரொம்ப தூரத்திலே இருக்குற
முதியோர் இல்லத்திலே விட்டு
தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!
என்று காதிலே விழுந்த போதும்
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!!
.

உனக்கென்னப்பா...!!!
பொண்டாட்டி தொல்லை இல்லை
என்று வாழ்த்துவது போல
கிண்டலடிக்கப் பட்ட போது
அவர் இறந்திருந்தார்..!!!
அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .
.
இப்போதுதான்
இறந்தாராம் என்கிறார்கள்..!!!
எப்படி நான் நம்புவது..???
நீங்கள் செல்லும் வழியில்
இப்படி யாராவது
இறந்து கொண்டிருப்பார்கள்... 
ஒரு வினாடியாவது நின்று
பேசி விட்டுச் செல்லுங்கள்..!!! 
.
இல்லையேல்...!!!! 
.
உங்கள் அருகிலேயே 
இறந்து கொண்டிருப்பார்கள் 
புரிந்து கொள்ளுங்கள் ..
.
வாழ்க்கை என்பது 
வாழ்வது மட்டுமல்ல..!!! 
வாழ வைப்பதும்தான் ..!!!!

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது. 

படித்ததில் பிடித்து பகிர்ந்து கொண்டது.

Top Post Ad

Below Post Ad