Type Here to Get Search Results !

கரோனா 3-வது அலை அடுத்த 6 முதல் 8-வது வாரங்களில் தாக்கக்கூடும்: எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை


கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை அடுத்த 6 முதல் 8 -ஆவது வாரங்களில் தாக்கக் கூடும் என்றும், கரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளில் எந்தவிதப் பாடமும் மக்கள் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.


 இதுதொடர்பாக அவர் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் எந்தவிதப் பாடமும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. 


 பல இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை, முகக்கவசம் அணிவதில்லை. அதனாலேயே மூன்றாவது அலையை நாடு எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலை எழலாம். 

 இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து தற்போது நாடு மீண்டு வருகிறது, இரண்டாவது அலையின்போது தினசரி தொற்று பாதிப்பு 4 லட்சத்துக்கும் அதிகமாகவும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் கண்டது. இரண்டாவது அலைகளின் போது பல மாநிலங்கள் ஆக்ஸிஜன், மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, மருந்து பொருள்கள் மற்றும் தடுப்பூசிகள் பற்றாக்குறையை சந்தித்தன,  இதனால் மக்கள் சமூக ஊடகங்கள் வழியாக உதவி கேட்டனர். 

 இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக செல்வதால் மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் நாட்டில் மூன்றாவது அலையை சந்திக்கக் கூடிய நெருக்கடியான நிலை உருவாகும். இப்போதே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கலாம் என்றே கருதுகிறேன். இதனால் தேசிய அளவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரியவதற்கு சிறிது காலமாகலாம்.  ஆனால் "தவிர்க்க முடியாத" மூன்றாவது அலை நாடு முழுவதும் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் தாக்கக் கூடும். 

இரண்டாவது அலையில் பாதிக்கபடாதவர்கள் மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 
 நாம் எவ்வாறு கரோனா முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் என்பதை பொறுத்தே மூன்றாவது அலையின் தாக்கத்தின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறினார்.
 

Top Post Ad

Below Post Ad