திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக அரசின் அலுவல் ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் உரைகள் போன்ற எல்லாவற்றிலும் ஒன்றியம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை குறித்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பிய போது, ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை என்றும் அவ்வாறே தொடர்ந்து அழைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா அல்லது பாரதம் என்ற இரண்டு வார்த்தைகளே உள்ளன. அவ்வாறு இருக்கையில் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
மேலும் ஆளுநர் உரையின்போது இறுதியில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம்பெறாதது பற்றி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்த தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வதையே கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருக்கையில் இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “மனுதாரர் கோரும் வகையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இவ்வாறு தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.