கரோனா வைரஸ் பரவும் அபாயத்தின் எதிரொலியால் கேரளத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை திரை அரங்கங்களை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
திங்கள்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47-ஆக அதிகரித்தது. திங்கள்கிழமை மட்டும் 3 வயதுக் குழந்தை உள்பட 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கேரளாவில் மட்டும் தற்போது 12 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவும் அபாயத்தின் எதிரொலியால் கேரளத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை திரை அரங்கங்களை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க கொச்சியில் செவ்வாயன்று மலையாளத் திரையுலக அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளயது என்றும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.