Type Here to Get Search Results !

இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு


தமிழகத்தில் படிப்பைப் பாதியில் கைவிட்ட இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பல்வேறு மாணவர்கள் குடும்ப வறுமையால் சூழல் காரணமாக வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கையில் குழந்தைகள் இடைநிற்றலை தவிர்த்து பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு செல்வதை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பள்ளி படிப்பை பாதியில் விட்ட 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தக்கோரி மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, பள்ளி படிப்பை பாதியில் விட்ட 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட மாணவர்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடத்திய கணக்கெடுப்பில் மாறுபட்ட தரவுகள் கிடைத்தது எப்படி? என்பது குறித்தும், இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழக பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Source: The Hindu Tamil


Top Post Ad

Below Post Ad