Type Here to Get Search Results !

மூட்டு வலிக்கு தீர்வு தரும் மஞ்சள் மற்றும் இஞ்சி




திருமணத்தில் மங்கள சூத்திரமாய், அட்சதையாய், கங்கணமாய் நன்னாட்களில் வாசல் முற்றங்களில் குங்குமத்துடன் பூசப்பட்ட கலவையாய், பொங்கல் பானைகளில் சுற்றிக் கட்டப்பட்டது மஞ்சள்.


தடைகளைத் தகர்க்கும் விநாயகனை மஞ்சளில் பிடித்து வழிபடுவதும் மங்களத்தைக் குறிக்கும். இப்படி, ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்த மஞ்சள், மங்களத்திற்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது.

ஒருவரது ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை பொறுத்தே அவரது உடல் ஆரோக்கியம் அமைகிறது என்பது இந்திய மருத்துவ முறைகளின் ஒரு முக்கிய கோட்பாடு. "வயிறுல தான் உயிர் இருக்கு" என்பது தமிழ் மருத்துவத்தின் வழக்கு மொழி.

பொதுவாக, குறைந்த செரிமான சக்தி, உண்டபின் ஏற்படும் வயிறு மந்தம் போன்ற நிலைகளுக்கு மஞ்சள் ஓர் அற்புத நிவாரணி.

மதிய உணவு உண்டபின், ஒரு சிட்டிகை அளவு மஞ்சளை சிறிது மோருடன் கலந்து எடுப்பது செரிமான சக்தியை தூண்டும்.


வலி நிவாரணி
மூட்டு வலி, சுளுக்கு, வீக்கம் போன்ற வலிகளுக்கு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் இரு சிட்டிகை தோல் நீக்கிய இஞ்சியை சேர்த்து நீர்விட்டு அரைத்து கொள்ளவும். ஒரு சுத்தமான துணியில் அதனை பரப்பி, வலிகண்ட இடத்தில் கட்டிக்கொள்ளவும்.

இரத்த சோகை
தினம் காலை ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்த நீரை, தேனுடன் கலந்து பருக வேண்டும்.

கண்வலி
ஒரு ஸ்பூன் நசுக்கிய மஞ்சளை ஒரு டம்ளர் அளவு சுத்தமான நீரில் கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டிய பின்னர், இந்த நீரில் துணியை நனைத்து, கண்களின் மேல் போட்டுக்கொள்ளலாம். வலியை குறைக்கும்.

மஞ்சள் இரத்தத்தை சுத்தம் செய்து உங்களின் சக்தி அமைப்பில் தெளிவை ஏற்படுத்த வல்லது. மஞ்சள் உடல்நிலையில் மட்டும் அல்லாது உங்கள் சக்தி நிலையிலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெளிப்புற தூய்மைக்கு ஒரு சிட்டிகை மஞ்சளை ஒரு வாளி தண்ணீரில் இட்டு, குளித்து வந்தால் தேகம் புத்துணர்வுடன் பிரகாசிக்கும்.

கபம் நீக்கும் வல்லமை
கபம் சார்ந்த தொல்லைகளால் அனுதினமும் இரு நாசிகளிலும் அடைப்பு ஏற்பட்டு அவதிப்படுவோர், மிளகு, தேன், வேப்பிலை, மஞ்சள் சேர்ந்த கலவை எடுப்பது ஆகச்சிறந்த பலனை அளிக்கும்.

10 முதல் 12 குறு மிளகை நசுக்கி, இரண்டு ஸ்பூன் தேனில் ஓர் இரவு (8 முதல் 10 மணி நேரம்) ஊறவைக்க வேண்டும். காலையில் இந்தக் கலவையை உட்கொள்ள வேண்டும்; மிளகை மென்று உண்ணலாம். தேனுடன் சிறிது மஞ்சளையும் கலந்து எடுத்துக் கொள்வதும் பலன் அளிக்கும். பொதுவாகவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தவிர்த்தாலே கபம் படிப்படியாய் குறையும்.


Top Post Ad

Below Post Ad