லண்டன்இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சாருலதா படேல். 87 வயது பாட்டி. தற்போது லண்டனில் வசித்து வந்தார். கிரிக்கெட்டின் தீவிர ரசிகையான இவர் இந்திய கிரிக்கெட் அணியை நேசித்தார். இங்கிலாந்தில் இந்திய அணி கலந்து கொள்ளும் எல்லா போட்டிகளையும் கண்டு களிப்பார். இந்நிலையில், இந்திய அணியின் தீவிர ரசிகையான சாருலதா படேல் காலமானார்.சாருலதா படேலின் மறைவுக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்து உள்ளது.
அது குறித்து பிசிசிஐ வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், இந்திய அணியின் சிறந்த ரசிகையான சாருலதா படேல் ஜி எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருப்பார், மேலும் விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் நம்மை ஊக்குவிக்கும். அவருடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என கூறப்பட்டு உள்ளது.கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பர்மிங்காமில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அந்த ஆட்டத்தை உற்சாகமாக கண்டுகளித்த ஆயிரக்கணக்கான ரசிகர்களில் வீல்சேரில் வந்திருந்த சாருலதா படேலும் ஒருவர் ஆவார்.மூச்சு விட தடுமாறும் வயதில் ‘தம்’ கட்டி ஊதுகுழலை ஊதியபடி, முகத்தில் மூவர்ண நிறத்தை தீட்டி கையில் தேசிய கொடியுடன் நமது வீரர்கள் ரன் அடித்த போதும், விக்கெட் வீழ்த்திய போதும் அவர் கொண்டாடிய விதம் சக ரசிகர்களை மட்டுமின்றி வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அது சமூக வலைதளங்களிலும் புகைப்படங்களாக அதிகம் பகிரப்பட்டன.ஆட்டம் முடிந்ததும் இந்திய கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் சாருலதா படேலை சந்தித்து ஆசி பெற்றனர். மூதாட்டி, அவர்களுக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது