Type Here to Get Search Results !

தவறான அக்கவுண்டிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா? 48 மணி நேரத்தில் புகாருக்கு தீர்வு; பணம் திரும்ப பெறலாம்




தவறான பரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளர் புகார் அளித்த 48 மணி நேரத்திற்குள் அந்த பணம் திருப்பி செலுத்தப்பட வேண்டும்.

ஒருவரது வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றால், வங்கிகளில் கால் கடுக்க காத்திருந்து பணம் டெபாசிட் செய்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் இருந்த இடத்தில் இருந்தே, ஓரிரு நொடிகளில் நீங்கள் விரும்புவோருக்கு பணம் செலுத்தும் வகையில் யூபிஐ, மொபைல் பேங்கிங் போன்ற வசதிகள் வந்து விட்டன.

தனியாக நேரம் ஒதுக்கி வங்கி வரை அலைந்து, திரிந்து வருவதை தவிர்க்க இது உதவியாக இருக்கிறது. அந்த வகையில் எண்ணற்ற மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஆனால், ஒன்றில் சாதகமான அம்சம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு ஏதேனும் சில குறைபாடுகளும் இருக்கத்தானே செய்யும். குறிப்பாக, நமது கவனக்குறைவு காரணமாகவே இத்தகைய குறைபாடுகள் சில சமயங்கள் ஏற்படுகின்றன.

நாம் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அந்த நபருக்குப் பதிலாக வேறொரு நபருக்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டால் என்ன செய்வது? அந்த பணம் இனி நமக்கு திரும்ப கிடைக்குமா? அதை எப்படி திரும்பப் பெறுவது என்ற கேள்விகளுக்கு இந்த செய்தியில் விடை காணலாம்.

புதிய விதிமுறைகள்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, தவறான பரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளர் புகார் அளித்த 48 மணி நேரத்திற்குள் அந்த பணம் திருப்பி செலுத்தப்பட வேண்டும். ஒருவேளை வாடிக்கையாளர் பணத்தை திரும்பப் பெற வங்கி உதவவில்லை என்றால், தொடர்புடைய நபர், bankingombudsman.rbi.org.in. என்ற இமெயில் முகவரியில் புகார் அளிக்கலாம்.

தவறான பரிவர்த்தனைகள் குறித்து வங்கிகளிலும் நேரடியாக எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம்.

என்ன விவரங்கள் தேவை?
தவறான பரிவர்த்தனை குறித்து புகார் அளிக்கையில், வங்கி கணக்கு எண், கணக்காளரின் பெயர், பரிவர்த்தனை குறியீடு எண், பரிவர்த்தனை தேதி, தொகை மற்றும் ஐஎஃப்எஸ்சி கோடு முதலிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.


சட்ட நடவடிக்கை
எந்த முயற்சியும் பலன் அளிக்காத நிலையில், சட்ட நடவடிக்கை மூலமாக உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். அதாவது, நீங்கள் தவறான ஒரு நபருக்கு பணம் அனுப்பி விட்டீர்கள். அதை நீங்கள் திரும்பக் கேட்கும்போது, அவர் திருப்பியளிக்க மறுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். தொடர்புடைய நபருக்கு எதிராக நீங்கள் வழக்குப்பதிவு செய்யலாம்.

பணத்தை திருப்பியளிக்க மறுக்கும் பட்சத்தில், அது ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறிய செயலாகக் கருதப்படும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, பயனாளரின் வங்கிக் கணக்கு குறித்து சரியான தகவல்களை வழங்குவது லிங்கர்களின் பொறுப்பு ஆகும். ஏதேனும் காரணங்களுக்காக லிங்கர் தவறு செய்தால், அதற்கு வங்கி பொறுப்பேற்காது.

Top Post Ad

Below Post Ad